Breaking News

பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தீர்ப்பளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு




பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தீர்ப்பளிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிவில் அமைப்பு செயற்பாட்டாளரும் 'நாம் ஸ்ரீ லங்கா' தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எச்.எம். பிரியந்த ஹேரத்தினால் குறித்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சார்பில் சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் போன்றோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பாராளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 10 வது பிரிவின்படி, வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான திகதி 2024 அக்டோபர் 04 முதல் அக்டோபர் 11 ஆம் திகதி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் சட்டத்தின்படி, வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நாளிலிருந்து 05 வாரங்களுக்கு குறையாமலும், 07 வாரங்களுக்கு மிகாமலும் தேர்தல் நடைபெறும் திகதி நிர்ணயிக்கப்படல் வேண்டும்.

அதன்படி, வேட்புமனுவை ஏற்கும் பணி முடிவடைந்த அக்டோபர் 11 ஆம் திகதி முதல் 05 வார கால அவகாசம் நவம்பர் 15 ஆம் திகதியும், 07 வார கால அவகாசம் நவம்பர் 29 ஆம் திகதியும் நிறைவடையும் என்று குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தற்போது பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 2024 நவம்பர் 14 ஆம் திகதி, குறித்த சட்டக் காலப் பகுதியில் உள்ளடக்கப்படாததால், அன்றைய தினம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது சட்டத்திற்கு முரணானது என்று மனுதாரர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இத்தவறு குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

மக்களின் இறையாண்மை மீறப்படுவதாகவும், அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாகவும் தீர்ப்பளிக்க வேண்டும் என்று மனுதாரர் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்..